திங்கள், ஜூலை 11, 2011

கல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு !!

இன்னைக்கு நம்மூர்ல சமச்சீர் கல்வி படுற பாடு எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம். இன்னைக்கு இந்தியாவின் சராசரி  படிப்பறிவு சதவிகிதம் 74.04% (2011) ஆனா இது உலக சராசரியை (84%) விட குறைவு.  இந்திய அரசும், மாநில அரசுகளும்  பல்வேறு திட்டங்களையும்,  வரைவுகளையும் நிறைவேற்றி உள்ளன.

கல்வி ஒரு அடிப்படை உரிமை எனவும் அறிவித்து உள்ளது இந்தியா அரசு ஆனாலும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்து உள்ளது.  அப்பிடின்னா எங்கயோ தப்பு இருக்கு, அது என்னான்னு பாக்குறதுக்கு முன்னாடி மத்திய அரசு என்ன மாதிரியான வரைவுகளுக்கு அனுமதி அளித்து இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கிறது அவசியம்.

2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் அமுலுக்கு வந்தது, இதன் சிறப்பு அம்சம் என்னான்னா

1.    6 முதல் 14 வயதுவரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி

2.    ஆரம்ப கல்வி முடியும் வரை எந்த குழந்தையையும் பள்ளியில் இருந்து நீக்க முடியாது

3.   ஆண்டு இறுதி தேர்வில் வெற்றி பெறுதல் கட்டாயம் இல்லை (இது கொஞ்சம் எதிர் விளைவுகளை உருவாக்கும் அம்சம், எந்த புண்ணியவான் இதை சொன்னரோ)

4.   பள்ளியில் சேர்க்கை பெறாத அல்லது பள்ளியில் சேர்ந்து இருந்தாலும் ஆரம்ப கல்வியை முடிக்காத 6 வயதிற்கு மேற்பட்ட   குழந்தைகளை வயதுக்குரிய வகுப்பில் சேர்க்க வேண்டும்.  (இதுவும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சம் என்னான்னா நீங்க உங்க  11 வயது குழந்தையை நேரா ஆறாம் வகுப்பில் கொண்டு போயி சேர்க்கலாம்)
    
5. 14 வயதிற்கு மேலும் ஆரம்ப கல்வி முடிக்கவில்லை என்றால், ஆரம்பகல்வி முடியும் வரை கல்வி இலவசம்.

6.  தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% ஒதுக்கீடு அளிக்கிறது.

7. திட்டத்திற்கான நிதிச்சுமை (56000 கோடி வருடத்திற்கு)  மத்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்

8 . பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் (குறைவாக உள்ள இடங்களில்) 3 ஆண்டுகளுக்குள் மேம்படுத்த வேண்டும் இல்லாயேல் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

9.  ஆசிரியர்கள் தகுந்த பட்டபடிப்புகள் முடித்து இருக்க வேண்டும் இல்லையேல் வேலையை இழக்க நேரிடும் இதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

நல்லா தானே இருக்கு, ஆனா ஏன் இது எல்லா எடத்துலயும் நடைமுறைக்கு வரலை என்ன சொல்லாறாங்க தெரியுமா

"மாநில அரசுகள் இந்த திட்டதிற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முன் வரவில்லை, எனவே இது மததி்ய அரசே ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது."  

"அரசின் கடமைகளை பிறர் தலையில் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது" அப்பிடின்னு தனியார் பள்ளிகள் கூறிவிட்டன.  

இதுல இருந்து என்ன தெரியவருதுன்னா எந்த ஒரு மசோதாவோ அல்லது திட்டமோ எந்த குழந்தையையும் பள்ளிக்கு வர வைக்காது எல்லோரும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும், எந்த திட்டமும் எல்லோருடைய பங்களிப்பும் சரியா இருந்தா மட்டுமே வெற்றியடையும்.

அப்ப ஏன் குழந்தைக்கு இலவச கல்வி கிடையாதான்னு கேக்குறீங்களா? இது அரசு பள்ளிகள்ல மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள்ல மட்டும் தான் செயல்படுத்த முடியும் போல இருக்கு. தனியார் பள்ளிகள்ல இது சாத்தியம் இல்லை.  அப்புறம் நம்ம குழந்தைகளை அரசு பள்ளியில சேர்க்க நம்ம கௌரவம் இடம் தராது. சரி அதுக்காக தனியார் பள்ளியில இப்பிடி கொள்ளை அடிக்கிறாங்களே கேட்க யாருமே இல்லையான்னு கேக்குறீங்களா?

அதுக்கும் நீங்க தானே காரணம், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை கந்து வட்டிக்கு வாங்கியாவது அந்த பள்ளிக்கூடத்தில ஏன் புள்ளையை சேர்த்தே தீருவேன்னு நிக்கிறீங்க.  வசதியா இருக்கணும்ன்னா செலவு செஞ்சுதான் ஆகணும் ஒத்துக்கிறேன் ஆனா கல்வி ஹோட்டல் மாதிரி பஃப்பேன்னு சொல்லி சாப்பிடாத ஐட்டத்துக்கு எல்லாம் பில் போடுற மாதிரி அயிடக்கூடாதுல்ல.  

ஏற்கனவே கல்வி கட்டண முறைப்படுத்துறோம்ன்னு தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்ன ஆச்சு, எத்தனை பள்ளிகூடத்துல அந்த கட்டணம் வசூல் பண்ணாங்க? இன்னும் அதுக்கே நிறைய பள்ளிகள் ஒத்துக்கலையே அவங்க எப்பிடி இலவச கல்வி அப்பிடின்னா ஒத்துக்குவாங்க?

எல்லா தொழிலும் லாபமா நடக்கனும் தானே எல்லோரும் ஆசைபடுவாங்க கேக்குறீங்களா? அது கூட நியாயம் தான் ஆனா லாபம் மட்டுமே பிரதானம்ன்னு நினைச்சா வேற தொழில் பண்ணலாமே.

இன்னைக்கு தரமான கல்வி இந்தியால படிக்கணும்ன்னா குறைந்தபட்சம் ரூ 60,000 முதல் ரூ 75,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கிறது, சராசரியா மாதத்திற்கு ரூ 6,000  வரை. இது ஒண்ணும் டிகிரி படிக்க இல்லை ஒண்ணாம் வகுப்பு சேர்க்க ஆகும் செலவு மட்டுமே, அடுத்தடுத்த ஆண்டுகளில் இது குறையும் என்றாலும் குறைந்த பட்சம் 40,000 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. மாத வருமானம் 10,000 உள்ள குடும்பங்கள் மாதா மாதம் இவ்வளவு பணம் எங்கிருந்து செலவு செய்வார்கள்? 

நான் எல்லாம் படிக்கும் போது எம்‌சி‌ஏ-க்கு மூணு வருஷம் கட்டுனா பீஸ் ரூ 23,000 இன்னைக்கு  ஒண்ணாம் கிளாஸ் சேர்க்க போன அதை விட ஜாஸ்தியா கேக்குறாங்களே என்னத்த சொல்ல.  ரொம்ப வருசத்துக்கு முன்னாடியில பாஸு இப்பதான் ஒரு ஏழு வருசத்துக்கு முன்னாடி முடிச்சேன். 

அப்ப எங்க குழந்தைகள் தரமான கல்வி இலவசமா படிக்க வழியே இல்லையான்னு கேக்குறீங்களா?  பள்ளிக்கூடம் எல்லாம் அரசுடைமை ஆனா மட்டும் தான் இது எல்லாம் சாத்தியம்.  எது எதுவோ அரசுடைமை ஆகுது இது ஆகாதா என்ன? அதுவும் இல்லாம இங்க இலவசமா குடுக்க வேண்டியது எல்லாம் குடுத்து முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன்.  

அரசாங்கத்துக்கிட்ட எதிர்பாக்குறது எல்லாம் தரமான கல்வி, ஒரே மாதிரியான கல்வி அதுவும் நியாயமான கட்டணங்களில், எந்த அரசு இதை செய்யுமோ? இன்னொரு காமராஜர் வருவாரா?

6 கருத்துகள்:

Radha N சொன்னது…

பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டண​​ங்கள் முறையாக வசூல் செய்யப்படுகிறதா அல்லது அதிகமாக கறக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டியது நிச்சயம் அரசின் கடமையாகும். தினசரிதாள்களிலும் தொலைக்காட்சிகளி​லும் காட்டப்படும் பெற்றோர்களின் ​போராட்டம் ஒன்றும் நாடகம் அல்ல. அந்த மாதிரி நிகழ்களுக்கு காரணமாகும் பள்ளிகளை தயவு தாட்சண்யம் காட்டாமல் அரசு கையகப்படுதினால் பள்ளிகளின் அடாவடி, வ​சூல் காணாமல் போய்விடும், மேலும் பள்ளிகளின் கட்டணங்களை எக்காரணம் கொண்டும் பணமாக வாங்க விடக்கூடாது. கட்டாயமாக வங்கியில் கட்டும்படி செய்யவேண்டும்

பாலா சொன்னது…

அதெப்படிங்க அரசுடைமை ஆக்க முடியும். பள்ளி கூடங்களை நடத்துவதே நம்ம அரசியல்வாதிகள்தானே?

நிரூபன் சொன்னது…

இன்றைய இந்தியாவின் கல்வி நிலையின் தரத்தினைப் பல தரவுகளின் உதவியோடு அலசியிருக்கிறீங்க.

ஆட்சியாளர்கள் மனசு வைத்தால், இந்திய நாட்டின் கல்வித் தரம் இன்னும் முன்னேற வாய்ப்பிருக்கு சகோ.

Unknown சொன்னது…

@நாகு
கருத்துக்கு நன்றி நண்பரே,
பெற்றோர் போராட்டம் பண்றது உண்மை தான் என்றாலும் இது எல்லா இடங்களிலும் நடக்கணுமே, தவிர அத்தகைய பள்ளிகளை புறக்கணிப்பதும் இருக்க வேண்டுமே?

Unknown சொன்னது…

@பாலா
நன்றி பாலா

ஒயின் ஷாப் எல்லாம் நடத்திக்கிட்டு இருந்தது யாரு?

கேபிள் TV தொழிலை நடத்தினது யாரு ?

இப்ப எப்பிடி அது எல்லாம் அரசுடைமை ஆச்சு?

Unknown சொன்னது…

@நிரூபன்
நன்றி நிரூ

இங்கே தரம் குறைவு என்பதல்ல விஷயம், தரமான கல்வி தான் இந்தியாவில் கிடைக்கிறது. அதனால் தான் பன்னாட்டளவில் மாணவர்கள் இங்கே வருகிறார்கள்.

இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது யாருக்கு இது கிடைக்கிறது என்பதே

ஒரு விலை உயர்ந்த பொருளாய் கல்வியும் ஆகிவிட்டது தான் பிரச்சனை. எல்லோருக்கும் எளிதாய் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம்.