திங்கள், டிசம்பர் 26, 2011

ஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....

இப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத பல நிகழ்வுகளின் கோர்வையாய் நம்மை பிரிய இருக்கிறது 2011. பல சுகமான நிகழ்வுகள், பல சோகமான நிகழ்வுகள், எல்லாம் முடிஞ்சு போனது ஆனாலும் நம் தவறுகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம், இல்லேன்னா ஒரு தடவை செய்த தவறுகளை மீண்டும் செய்ய நேரிடலாம்.   

இந்த உலகில் நாம் அடிமையான விஷயங்கள் நிறைய உள்ளன மது, நிகோடின், ஹெராயின், பாலியல், மற்றும்  ஐபோன்கள்.  இதை எல்லாம் விட மிக பெரிய போதை நமது சொந்த கருத்துக்களுக்கு நாமே அடிமையாகி உள்ளது. நாம் சொல்வது தான் சரி என்று நினைக்க ஆரம்பிக்கும் போதே இந்த போதை துவங்குகிறது. 

சிறந்த உதாரணம் அன்னா ஹசாரேன்னு ஒரு பெரிய மனுஷன் பண்ணுற வேலை. இதுவரை அவர் இந்த வருஷம் நிறைய வாட்டி உண்ணாவிரதம் இருந்துட்டார், நாளைக்கு கூட உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்போறார், அவர் நினைக்கிறது எல்லாம் நடக்கணும்ன்னு அவர் நினைக்கிறது அவருக்கு சரியா இருக்கலாம் ஆனா நடைமுறைக்கு சாத்தியம் தானான்னு யோசிச்சா அது என்னவோ ஒத்து வராதுன்னு தோணுது.

லஞ்சம் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்ன்னு சொல்றாரு, ஆனா அதுக்கு லஞ்சம் வாங்காம இருந்தாலோ இல்ல நாம லஞ்சம் குடுக்கமா இருந்தாலோ மட்டும் முடியுமா? இந்த பிரச்சனையோட ஆணிவேர் வேற, வேர்ல இருக்க கோளாரை சரி செய்யாம கிளையில இருக்கிற பிரச்சனைக்கு மருந்து தேடுவது புத்திசாலித்தனமா செயலா இருக்காதுங்கிறது என்னோட எண்ணம்.

சின்ன உதாரணம் சொல்றேனே, இப்போ எல்லாம் டியூஷனுக்கு வர்ற பசங்களுக்கு நிறைய மார்க் போடுற ஆசிரியர்கள் எத்தனை பேர்? ஏன் பண்ணுறாங்கன்னு யோசிச்சா அப்படி செஞ்சா தானே பசங்க டியூசனுக்கு வருவாங்க? அப்போ தானே வருமானம் வரும். இது அந்த குறிப்பிட்ட ஆசிரியரோட பொருளாதார சூழ்நிலையே நிர்ணையிக்குது. சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அதாவது ஒருவருடைய பொருளாதார சூழ்நிலையே இதுக்கு எல்லாம் ஆரம்ப புள்ளி,

இதுக்கு தீர்வு தான் என்ன, ஒண்ணும் கிடையாது, நான் யோசிச்ச வரையில. அல்லது அது நடைமுறைக்கு ஒத்து வராது. ஏன்னா நம்ம மக்கள் தொகை அப்பிடி, எல்லோருக்கும் கல்வி இலவசமா கொடுக்கணும், மருத்துவம் இலவசமா கொடுக்கணும் இது ரெண்டு தான் நம்ம கிட்ட ஒரே வழி. இது இரண்டுக்கும் தான் வாழ்நாள் சேமிப்பை கரைக்கும் சக்தி உண்டு. இதை எல்லாம் அரசு செய்ய முடியாதான்னு கேக்குறீங்களா? செய்யுறதுக்கும் பணம் வேணுமே? வரி அப்பிடின்கிற பேர்-ல அதுவும் நம்ம தலை மேலே தானே விழும். இப்பயும் நான் எஜுகேஷன் செஸ்ன்னு வரி கட்டுறேனேன்னு கேக்குறீங்களா? அதுவும் பத்தாமா தானே அரசு பள்ளி எல்லாம் நலிவடைஞ்ச நிலையில இருக்கு?

அப்ப இந்தியாவுல லஞ்சம் ஊழல் ரெண்டையும் ஒழிக்க முடியாதான்னு கேக்குறீங்களா? அது தொட்டில் பழக்கம் நீங்க அதை குற்றம்ன்னு பார்க்காம நீங்க கொடுக்கிற 100 ரூவா ஒரு குடும்பத்தை சந்தோஷமா வாழவைக்கிற உதவின்னு வச்சுக்கோங்களேன் என்ன கெட்டுப்போச்சி. இல்லை  உங்களுக்கு ஆக வேண்டிய வேலைய முடிச்சு குடுக்குறதுக்கு குடுக்குற சர்வீஸ் சார்ஜ்ன்னு நெனைச்சுக்கோங்க தப்பா தெரியாது!!   

நீங்க சொல்லுறது கேக்குறது,  50 / 100 வாங்குனா பரவாயில்லை அது அவன் பொருளாதார சிக்கல் எல்லாம் ஒத்துகிறோம் ஆனா கோடிக்கணக்கில வாங்குறாங்களே சிலர் அதுக்கு என்ன சொல்றீங்கன்னு தானே கேக்குறீங்க? பேராசைன்னு ஒரே வார்த்தையில சொல்லிடலாம். விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கிறது சகஜம் தானே, அதை விட முக்கியம் அதையும் செய்ய துணியிறான்னா அதுக்கு மேலேயும் ஏதோ ஒண்ணு கிடைக்குதுன்னு அர்த்தம். அதுவும் இல்லாம அவங்க பக்கம் ஏதோ தப்பு இருக்குனு தானே அர்த்தம், அப்படி இருக்குறப்ப இந்த லஞ்சம் ஊழல் எல்லாத்தையும் ஒழிப்பேன்ன்னு சொல்லுறது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு பேச்சு தானே. மலிவான புகழுக்கு ஆசைப்பட்டு செய்யுற வேலை தானே?? உங்களுக்கு என்ன தோணுதுன்னு கொஞ்சம் சொன்னா தேவலை....


டிஸ்கி : ரொம்ப நாளா பதிவு பக்கம் வார முடியல கொஞ்சம் வேலை பளு அதிகம். நண்பர்கள் மன்னிக்கவும், முடிந்த வரை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! வரும் ஆண்டு எல்லா நல்லவைகளும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.  

இன்றைய லொள்ளு


வியாழன், டிசம்பர் 01, 2011

தண்ணீர் தண்ணீர்

இன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர்.  தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்கும் போது எங்கோ படித்த கவிதை வரி ஞாபகம் வருகிறது "என் தாத்தா தண்ணீரை ஆற்றில் கண்டார். என் அப்பா கிணற்றில் பார்த்தார், நான் குழாயில் கண்டேன். என் மகன் பாட்டிலில் பார்க்கிறான், என் பேரன் பார்ப்பதற்கு என்ன இருக்கும்?".  இதுவரை சும்மா இருந்த கேரளாவும்,  வேற அணை கட்டியே தீருவோம்ன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு போராட்டம் உண்ணாவிரதம்ன்னு  ஆரம்பிச்சுட்டாங்க.

அவங்க சொன்ன மாதிரி செஞ்சுட்டாங்கன்னா கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நடைபெறும் விவசாயம் நக்கிக்கிட்டு போயிடும். குடிநீருக்கு அவதிப்படும் நிலையும் வரும்.  இன்னைக்கு இந்த பிரச்சனை மிகவும் தீவிரமா அணுகப்படுவதால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழல் இருக்கவே செய்கிறது. 

இதுவரை காவேரியும்,பாலாறும்  மட்டுமே பிரச்சனையாய் இருந்தது, இனி முல்லைபெரியாறும். இனியும் மௌனமாய் இருந்தால் தமிழ்நிலம் பாலைநிலமாய் மாறும் என்பது கண்கூடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்தி இருந்த பூமி இப்போது பொட்டல் காடாய் கிடக்கிறது, ஆடுகளும் மாடுகளும் ரசாயன தீவனங்களை தின்பதால் பாலில் கூட அமிலத்தின் அளவும் அதிகமாகி விட்டன.

இனி குடிநீர் கூட சில பல மைல்கள் நடந்து சென்று எடுத்துவரும் கொடூர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் சில கிராம மக்கள். மரங்கள் நிறைந்து இருந்த தமிழக வனங்கள் இன்று வெறும் முட்புதர்களால் மூடிக்கிடப்பது வேதனை.   அந்த காலத்தில் கோயில் கட்டும் போது குளத்தையும் சேர்த்தே வெட்டினார்கள், அது  கடவுளுக்கு அபிஷேகம் செய்ய என்று புரிந்து கொண்டது நம் முட்டாள்தனம் என்றால் மிகையில்லைதானே. 

இன்று அந்த குளங்களின் நிலைதான் என்ன? கடவுள் கூட ஓடி விடுவார் ஒரு முறை அந்த நீரை வைத்து அபிஷேகம் செய்தால். குளங்கள் எல்லாம் குப்பைமேடானதிற்கும், மணல் மூடி போனதிற்கும் யார் பொறுப்பு நாம் தானே?  நம்முடைய பொறுப்பற்ற தன்மைதானே?? இனி எந்த அசோகர் வரவேண்டும் என்று நாம் காத்துக்கொண்டு இருக்கிறோம்? நம்மை சுற்றி உள்ள நீர்நிலைகளை நாம் அசுத்தம் செய்யாமல் இருந்தாலே அல்லது பாதுகாத்து வந்தாலே நமக்கு தேவையான நீர் கிடைக்குமே? 

சரி என்ன தான் பண்ணுறதுன்னு கேக்குறீங்களா? நீராதாரங்களை பெருக்குவதிலும் அதை முறையாய் பராமரித்தாலும் ஒரே தீர்வு. யாருடைய தயவும் இல்லாமல் தமிழகத்தின் நீராதாரம் இருக்க வேண்டுமானால்,  ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தமிழகத்தின் பிரதான பாசன வசதிகளான 35 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரப் பகுதிகள் பல ஆண்டுகளாகப் பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி, அவற்றை தூர் வாராமல், பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. பல ஏரிகளின் கரைகள் மட்டும் உள்ளன. இதன் விளைவாக, அண்மைக் காலங்களில் பெரிய அளவில் மழை பெய்தாலும், முறையாக தேக்கி வைக்க வாய்ப்பு இல்லாமல் கடலுக்குச் சென்றுவிட்டது.

ஏரி,  குளங்களை குடியிருப்பு நிலங்களாக மாற்றி வெளிநாட்டினரும், வெளிமாநிலத்தவரும் வாங்குவதைத் தடுக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்

அடுத்து முக்கியமான விஷயம் மணற்கொள்ளை, ஏறக்குறைய தமிழகத்தில் இருக்கும் எல்லா ஆறுகளிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது, இன்னும் சட்டங்கள் கடமையாக்கப்பட்டு மணற்கொள்ளை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். தொழில்வளம், வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர்கள் நிலை இவைகள் பாதிக்கப்படாமல், நிலம் மற்றும் நீர் மாசுபடுவதைத் தடுத்தல் மற்றும் மாசுபடுவதைத் தடுக்க அரசு ஆவண செய்யவேண்டும். 

மழைநீர் சேகரிப்பு, நீரைப் பயன்படுத்தும் முறையில் விழிப்புணர்வு போன்றவைகளில் அரசும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை செயல்படுத்தவில்லை. அவைகளும் சரிசெய்யப்பட்டு சரியான திட்டங்களும் வகுக்கப்படவேண்டும்.

காத்திருப்போம் எம் தாகம் தீரும் நாளுக்காய் !!

இன்றைய லொள்ளு

இப்பிடி ஒரு ப்ராடக்ட் வந்தா நல்லா தான் இருக்கும்