திங்கள், ஏப்ரல் 25, 2011

பலவீனத்தை பலமாக்குங்கள்

ஒரு ஜப்பானிய சிறுவனின் கதை. அந்த 10 வயது சிறுவன் ஜூடோ கற்றுக்கொள்ள விரும்பினான். ஒவ்வொரு குருவாக சென்று கற்றுத்தரும் படி கேட்டான,  யாரும் அவனுக்கு  கற்றுக்கொடுக்க முன்வரவில்லை ஏனென்றால் அவனுக்கு இடது கை இல்லை. ஒரு விபத்தில் இடது கையை பறிகொடுத்துவிட்டான்.  கடைசியாக  ஒரு வயதான குரு அவனுக்கு கற்றுக்கொடுக்க முன் வந்தார்.

பயிற்சிகள் ஆரம்பமானது, சிறுவனும் ஆர்வமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். நாட்கள் மாதங்கள் ஆனது, ஆனால் அந்த ஒரு குறிப்பிட்ட  பயிற்சியைத்தவிர குரு வேறு எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை. மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் சிறுவன் குருவிடம் கேட்டான், "இதை தவிர வேறு எதுவும் கற்று தரமாட்டீர்களா?"  என்று. குரு சொன்னார், உனக்கான பயிற்சி இது மட்டுமே , இதை நன்றாக பயிற்சி செய்து கொள். 

மேலும் சில மாதங்கள் ஓடி விட்டன. இப்போது அந்த சிறுவனை போட்டிக்கு அழைத்து சென்றார் குரு. முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்று விட்டான் சிறுவன். மூன்றாவது ஆட்டம் சற்று கடினமாக இருந்தாலும் அதிலும் வெற்றி பெற்று விட்டான். சிறுவனால் நம்ப முடியவில்லை. இப்போது சிறுவன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டான்.  இறுதி போட்டியில் இவனோடு மோதப்போவது இவை விட மிக பாலசாலியான மற்றும் அனுபவம் மிக்க போட்டியாளர்.

சிறுவனும் மனம் தளராமல் போட்டியில் இறங்கினான், சில பெரிய போராட்டங்களுக்கு  பிறகு வெற்றி சிறுவனிடம் வந்தது. இப்போதும் அவனால் நம்ப முடியவில்லை. குருவிடம் கேட்டான், எப்படி என்னால் அவர்களை வெல்ல முடிந்தது. குரு அமைதியாக சொன்னார், நீ ஒரே பயிற்சியை திரும்ப திரும்ப செய்ததால் அதில் நிபுணத்துவம் பெற்று விட்டாய், மேலும் உன்னை எதிர் கொள்ள  வேண்டுமானால், உன்னுடைய இடது கையை எதிராளி பிடக்க வேண்டும், உனக்கு அது இல்லாததால், அவர்களால் உன்னை வெற்றி கொள்ள முடியவில்லை.

கருத்துகள் இல்லை: